செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் முக்கியமான ஒன்றாகும். செய்தியாளராக இருப்பவர் நேர்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டும். நேர்காணல்கள் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிற்கு செய்திகளில் நேர்காணல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
விளக்கம்
நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி நேர்காணல் (Interview) என்பதற்கு “மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தல்; அதாவது கூட்டம் நடத்தக் காணுதல், செய்தித்தாளில் பணியாற்றுகின்ற ஒருவரும் வெளியிடுவதற்காகத் தகவல்களைத் தர அவர் தேடும் ஒருவரும் கூடிப் பேசுதல்” என்று பொருள் தருகிறது.
நோக்கம்விளக்கம்
நேர்காணல் என்பது ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது கடிதம் வழியாகவோ அல்லது புதிய தகவல் தொடர்பு சாதன வழியாகவோ இருக்கலாம். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி நேர்காணல் (Interview) என்பதற்கு “மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தல்; அதாவது கூட்டம் நடத்தக் காணுதல், செய்தித்தாளில் பணியாற்றுகின்ற ஒருவரும் வெளியிடுவதற்காகத் தகவல்களைத் தர அவர் தேடும் ஒருவரும் கூடிப் பேசுதல்” என்று பொருள் தருகிறது.
நேர்காணல் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோக்கத்துடன் நடத்தப் பெறும். நோக்கமற்ற நேர்காணல் பொழுது போக்குப் பேச்சு போலாகிவிடும். நேர்காணல் செய்பவர் நேர்காணலின் நோக்கம் குறித்துத் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவாக நேர்காணல் நடத்துவதற்கான நோக்கங்கள் சில உள்ளன. அவை;
நடப்பு அறிதல் - நடந்து கொண்டிருக்கும் சில சுவையான நிகழ்வுகள் குறித்த விபரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.
நிகழ்வு விவரம் அறிதல் - நடைபெறப் போகும் முக்கிய நிகழ்வு குறித்த விபரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.
கருத்து வெளிப்படுத்தல் - தலைவர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்களின் ஆளுமைத் திறன், தனித்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்த நேர்காணல் செய்தல்.
நேர்காணல் செய்தல்
நேர்காணல் கொள்ளப்படுபவரிடமிருந்து நேர்காணல் செய்பவர் பல தகவல்களை வெளிக் கொண்டு வரும் தனித்திறனுடையவராக இருக்க வேண்டும். அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர் தனிப்பட்டு “இதனை வெளியிட வேண்டாம்” (Off the record) என்று கூறும் செய்திகளை வெளியிட்டு விடக் கூடாது.பொதுவாக நேர்காணலுக்கு திட்டமிடுதல், இணங்க வைத்தல், தெளிவாக அறிதல், தொடர் முயற்சி எனும் நான்கு முக்கிய பங்குகள் இருக்க வேண்டும்.
பயன்கள்
நேர்காணலினால் பல நன்மைகள் கிடைத்தாலும் அவை கீழ்காணும் முக்கியப் பயனைக் கொண்டுள்ளது.
- செய்திகளை உருவாக்குதல்
- வேறுபாடுகளை வெளிக்கொணர்தல்
- பொதுமக்கள் கருத்து உருவாக்குதல்
- அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அறிய துணை செய்தல்
- கண்டுபிடிப்புகள், திட்டங்கள் விளக்குதல்
- சமுதாயத்தில் புகழ் பெற்றவர்கள் - வாசகர்கள் ஆகியோர்க்கு இணைப்பாக இருத்தல்
- பல்வேறு கருத்துக்கள் வெளிவர வாய்ப்பாயிருத்தல்
- சுவையான கட்டுரை கிடைத்தல்
செய்யக் கூடியதும்- செய்யக் கூடாததும்
நேர்காணலில் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும் என்பதைச் செய்தியாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செய்யக் கூடியது
- நேர்காணல் தருபவருடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற்று இடம், நேரம் போன்றவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
- நேர்காணல் குறித்து திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும். கேட்க வேண்டிய கேள்விகளையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
- நேர்காணல் கொள்பவர் குறித்தும், நேர்காணலுக்கான பொருள் குறித்தும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
- நேர்காணலை ஆவலுடன் நடத்துவதுடன், சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
- நல்ல உடையணிந்து செல்ல வேண்டும்.
- கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில் போதாத நிலையில் அது குறித்த கூடுதல் கேள்விகள் கேட்க வேண்டும்.
- குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல வேண்டும்.
- நேர்காணலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
- குறிப்புகள் சரியான முறையில் எடுக்க வேண்டும்.
- எவற்றை வெளியிடுவது? எவற்றை வெளியிடக் கூடாது? என்பதில் தெளிவு வேண்டும்.
- முடிந்தால் வெளியீட்டிற்கு முன்பு எழுதிய நேர்காணலைக் கொடுத்து, நேர்காணல் அளித்தவரிடம் ஒப்புதல் பெறலாம்.
செய்யக் கூடாதது
- நேர்காணல் தருபவரை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.
- நேர்காணல் தருபவரிடம் அடிமை போல் நடக்கக் கூடாது; அதே சமயம் ஆட்டிப்படைக்க நினைக்கவும் கூடாது.
- நேர்காணலின் போது அடிக்கடி இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது.
- கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக் கூடாது.
- தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது.
- விவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
- தாமாக நேர்காணலை முடித்துக் கொள்ளக் கூடாது.
நேர்காணல் கட்டுரை எழுதுதல்
நேர்காணல் கட்டுரையை இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற நிலை இல்லை. இருப்பினும் கட்டுரை சுவையாக அமைவது செய்தியாளரின் எழுத்துத் திறமையில்தான் உள்ளது. பொதுவாக நேர்காணல் கட்டுரை எழுதுவதில் இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
கேள்வி பதில் வடிவம்
நேர்காணல் குறித்த ஒரு சிறிய முன்னுரை கொடுத்துவிட்டு, நேர்காணல் நடந்தது நடந்தபடியே கேள்வி, பதில்களாக சொற்களைக் கூட மாற்றாமல் அப்படியே எழுதுவிடுவது.
கட்டுரை வடிவம்
நேர்காணலை கட்டுரை வடிவில் எழுதுவதில் எழுதுகின்ற பொழுது, எழுதுபவர் மிகவும் சுதந்திரமாகக் கட்டுரையை அமைத்துக் கொண்டு நேர்காணல் தந்தவர், சூழ்நிலை போன்றவைகள் பற்றி விவரித்து, இடையிடையே நேர்காணல் தந்தவர் சொன்ன மேற்கோள்கள் கொடுத்து கட்டுரை அமைக்கலாம். செய்தியாளர் கவனித்தவற்றுடன் கருதுபவைகளையும் எழுதலாம். இருப்பினும் கட்டுரை எழுதுவதில் சில வழிகாட்டல்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றில்,
- அறிமுக உரை
- நேர்காணலின் கருதுகோள்
- பதில்கள்
- தொடர்
- மேற்கோள்கள்
- நேர்காணல் விவரங்கள்
- புகைப்படங்கள்
ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.